ETV Bharat / state

தொடர் கொலை முயற்சிகள்..! : ரேசர் கணேசனை வலை வீசித் தேடும் காவல்துறை

author img

By

Published : Feb 7, 2022, 6:23 AM IST

பொதுமக்களை அரிவாளால் வெட்டித் தாக்கிவந்த 2 ரவுடிகளில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து, ஓடிப்போன மற்றொருவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை: அம்பத்தூர் அடுத்த சண்முகாபுரம் பகுதியில் கட்டட வேலை செய்து வருபவர் மாணிக்கம் (53). இவர் நாய்களுக்கு பிஸ்கெட் வாங்க அருகிலுள்ள கடைக்கு வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த இருவர் தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டு இருந்துள்ளனர்.

இதனைக் கண்ட மாணிக்கம், அவர்களை சமாதானம் செய்ய சென்றுள்ளார். அப்போது சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணிக்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மாணிக்கத்திற்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆட்டோவில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். போகும் வழியில் அதே பகுதியில் உள்ள திமுக பிரமுகரும், முன்னாள் சூரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீராம் என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கார்பியோ காரின் பின்பக்கக் கண்ணாடியை அடித்து நொறுகியுள்ளனர்.

இதேபோன்று புண்ணிய குமார் (50) என்பவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு வலது காலில் வெட்டு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பிரபாகரன் (30) என்பவரையும் வெட்டித் தாக்கியுள்ளனர்.

காவல்துறை விசாரணை

மேலும் வினோத் குமார் (35) என்பவரையும் வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு வலது, இடது கைகளில் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் இருவர் கத்தியுடன் சுற்றுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லிவாக்கம் காவல்துறையினரை துரத்தி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர், மற்றொரு ரவுடி தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட ரவுடியிடம் விசாரணை செய்ததில் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் அருள் நகர் முருகம்பேடு பகுதியை சேர்ந்த கணேசன் என்கின்ற கணேஷ் குமார் என்பதும் இவர் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி போன்ற 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

தப்பியோடிய ‘ரேசர்’ கணேசன்

தப்பியோடிய மற்றொரு ரவுடி ரேசர் கணேசன் என்பவர் மீது பட்டாபிராம், திருநின்றவூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் இவர்கள் அப்பகுதி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் எனத் தெரியவருகிறது. பிடிபட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அம்பத்தூர் பகுதியில் பொதுமக்களை வெட்டியது இருவர் தான் எனவும் தெரியவந்துள்ளது.

ரவுடி ஒருவரை கைது செய்துள்ள நிலையில் தப்பி ஓடிய ரவுடி ரேசர் கணேஷ் என்பவரைக் காவல்துறை தேடி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரவுடிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறையின் அலட்சியத்தால் ரவுடிகள் சாதாரணமாக சுற்றி வருவது மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க:அடித்துக்கொலை செய்யப்பட்ட தொழிலாளி... போலீஸார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.